அமேரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு இதுவரை சீனா குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் எமிலி ஜே ஹார்னி சீனா குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அண்டை நாடுகளை மிரட்டும் வகையில் சீனா தொடர்ந்து செயல்பட்டு வருவது அமெரிக்காவுக்கு கவலை அளிக்கிறது.
எல்லைப் பிரச்னை குறித்து இந்தியா – சீனா இடையே நடக்கும் பேச்சுவார்த்தையை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது. இரண்டு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். இந்திய – பசிபிக் கடல் பிராந்தியம் அனைத்து நாடுகளுக்கும் முக்கியமானது. சீனாவின் ஆதிக்க முயற்சிக்கு எதிராக உள்ள நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா என்றும் துணை நிற்கும்” என்றார்.